| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் | 
| ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
 தாமெடுத்த கூரை தவிரப் போவார்
 தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
 கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 1 | 
| முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
 பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
 பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
 கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 2 | 
| நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
 ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
 ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
 களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 3 | 
| பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
 அடிநாறுங் கமலத்தர் ஆரூ ராதி
 ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
 கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 4 | 
| விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
 எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
 இறையனாய் எம்மிறையே யென்று நிற்குங்
 கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 5 | 
| விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
 பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
 பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
 கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 6 | 
| பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் பேதப் படுகின்ற பேதை மீர்காள்
 இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
 எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
 கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 7 | 
| இயல்பாய ஈசனை எந்தை தந்தை என்சிந்தை மேவி யுறைகின் றானை
 முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
 தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
 கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மயலாய மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 8 | 
| செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
 உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
 காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
 கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
 கழிப்பாலை மேய கபாலப் பனார்
 மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 9 | 
| பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன் புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
 இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
 ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
 கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
 கால்விரலா லூன்று கழிப்பா லையார்
 வருதலங்க மாயக் குரம்பை நீங்க
 வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |